இல்லத்தில் இருந்தபடியே இன்டெர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி? - 1 | கற்போம்

இல்லத்தில் இருந்தபடியே இன்டெர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி? - 1

ஆன்லைன் மூலம் பணம் சாம்பாதிப்பது என்றாலே நிறைய பேருக்கு ஏமாற்று வழியாக இருக்குமோ என்ற எண்ணம் தோன்றும். ஏனென்றால் பெரும்பாலானவர்கள் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் வீட்டில் இருந்தே பல்லாயிரம் சம்பாதிக்கலாம், விளம்பரங்களை கிளிக் செய்தல், சர்வேக்களில் பங்கெடுத்தல் போன்ற சில வழிகளை மட்டுமே அறிந்திருப்பீர்கள். அத்தோடு இதை செய்த சிலர் எதிர்பார்த்த பணம் வந்திருக்காது அல்லது ஃபிராடு பேர்வழிகளிடம் ஏமாந்திருக்க கூடும். ஆனால் ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பது என்பது இவை மட்டுமல்ல இவற்றை தாண்டி பல்வேறு முறைகள் உள்ளன. இந்த தொடரில் நான் எழுதப்போகும் அனைத்துமே நம்பகமானவை, நிறைய பேர் பணம் சம்பாதிக்கும் முறைகளும் கூட.

இந்த முறைகளின் மூலம் பணம் சம்பாதிக்க வெறுமனே கம்ப்யூட்டரும், இன்டர்நெட் இணைப்பும் இருந்தால் மட்டும் போதுமா என்றால் நிச்சயம் கிடையாது. நிறைய திறமையும் அவசியம். இங்கே கூறப்படுபவற்றில் எது உங்களுக்கு சரியாக வரும் என்று தோன்றுகிறதோ அதை மட்டும் செய்யுங்கள்.

ஏற்கனவே இணையம் பரிச்சயம் ஆனவர்களுக்கு நிச்சயம் கூகுள், பேஸ்புக், ட்விட்டர், யூ-ட்யூப் போன்றவற்றை பற்றி தெரிந்திருக்கும். இணையம் மூலம் சாம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இவைதான் பெரிய உதவி செய்யும். இதற்கு மேல் கட்டுரையை வழவழவென்று இழுக்காமல் முக்கியமான பகுதிக்குள் செல்லலாம்.

முதல் வழி: Adsense



இணையம் மூலம் பணம் சம்பாதிக்கும் நிறைய பேரால் நம்பகமான ஒரு வழி என்று கூறப்படும் ஒரே முறை ஆட்சென்ஸ் தான். இது கூகுளின் நிறுவனங்களில் ஒன்று. இதன் மூலம் பணம் சாம்பாதிக்க நீங்கள் இலக்கண தவறின்று ஆங்கிலத்தில் அல்லது ஆட்சென்ஸால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு மொழியில் கட்டுரைகள் எழுத தெரிந்தவராக இருக்க வேண்டும். ஆட்சென்ஸ் அக்கவுண்ட் கிடைக்க தெளிவான தவறற்ற மொழித்திறமை தேவையில்லை. ஓரளவுக்கு நன்றாக எழுத தெரிந்தாலே ஆட்சென்ஸ் அக்கவுண்ட் கிடைத்து விடும். ஆனால் நிறைய வாசகர்களை சென்றடைய இலக்கண தவறின்று குறிப்பிட்ட மொழியில் எழுத தெரிந்திருக்க வேண்டும். இந்திய மொழிகளில் ஹிந்தி மட்டுமே ஆட்சென்ஸால் அங்கீகரிப்பட்ட மொழியாகும்.

நீங்கள் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். உதாரணமாக நீங்கள் அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவராக இருந்தால் அது குறித்த அனுபவங்களை ஆங்கிலத்தில் பயணக்கட்டுரையாக எழுதலாம். கணினி, மொபைல் தொழில்பட்பம் உங்களுக்கு அதிகம் தெரியும் என்றால் அவற்றை குறித்து எழுதலாம். நீங்கள் நன்றாக சமைப்பவராக இருந்தால் குறிப்பிட்ட உணவு முறைகளை எப்படி செய்வது என்று எழுதலாம். பள்ளி, கல்லூரி தேர்வுகளில் ஆங்காங்கே தேவையான இடத்தில் படங்களை வரைவது போல இங்கேயும் சரியான இடத்தில் தேவையான படங்களை சேர்க்கலாம். மேலே சொன்ன மூன்று மட்டுமின்று நீங்கள் எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். எழுதியவற்றை பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் உங்கள் கணக்குகள் அல்லது பக்கங்களில் பகிரலாம்.

சரி எழுதுவது என்றால் எங்கே எழுதுவது என்ற கேள்வி உங்களுக்கு இந்நேரம் வந்திருக்கும். Blogger போன்ற வலைப்பதிவுகளின் மூலமோ அல்லது Wordpress, Joomla, Drupal போன்ற CMS (Content Management System) மூலமோ நீங்கள் உங்கள் இணையபக்கத்தை ஆரம்பிக்கலாம். முதலாவதில் பணம் செலவின்றி உங்களுக்கென ஒரு பக்கத்தை தொடங்கிக் கொள்ளலாம். அவை myname.blogspot.com என்று இருக்கும். facebook.com, twitter.com போன்று உங்களுக்கு பிடித்த பெயரில் வரவேண்டும் என்றால் அதற்கு மட்டும் நீங்கள் பணம் செலுத்தி பெயரை பெற்றுக் கொண்டு பயன்படுத்தலாம். Wordpress, Joomla, Drupal போன்றவற்றை பயன்படுத்த நீங்கள் ஆரம்பத்திலேயே பணம் செலுத்தி Web Hosting வாங்க வேண்டும். இவற்றில் Bloggerஐ விட பல வசதிகள் அதிகமாக இருக்கும். புதியவர்கள் முதலில் Blogger மூலம் எழுத ஆரம்பிப்பதே சிறந்தது. [இதற்கு மேல் இவை பற்றி எழுதினால் அதுவே பெரிய தொடராகி விடும். இது குறித்த கேள்விகள் இருப்பின் என் மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் எழுதலாம். prabuk@live.in ]

சரி பிளாக்கர் மூலம் எழுத தொடங்கியாயிற்று, அடுத்து என்ன செய்வது என்று நீங்கள் கேட்கலாம். இப்போது adsense.com என்ற தளத்திற்கு சென்று உங்கள் ஜிமெயில் கணக்கின் மூலம் புதிய ஆட்சென்ஸ் கணக்கை உருவாக்க வேண்டும். இதில் உங்கள் இணையதளம் குறித்த இடத்தில் உங்கள் இணைய முகவரியை கொடுத்து, அடுத்த பக்கத்தில் உங்கள் தகவல்களை கொடுத்து Adsense கணக்கிற்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த உடனே ஒரு ஆட்சென்ஸ் கணக்கு உங்களுக்கு உருவாகி விடும். அதில் லாகின் செய்து My Ads பகுதிக்கு சென்று Ad Unit ஒன்று உருவாக்கி அதில் வரும் AdSense codeஐ உங்கள் தளத்தில் சேர்க்க வேண்டும். நீங்கள் Code சேர்த்த இடம் உங்கள் இணையபக்கத்தில் வெற்றிடமாக இருக்கும். இதை செய்து முடித்த 48 மணி நேரத்தில் உங்கள் கணக்கு Approve ஆகி இருந்தால் உங்கள் தளத்தில் விளம்பரங்கள் வரும். இல்லையெனில் உங்கள் தளம் ஏன் Approve ஆகவில்லை என்பது மின்னஞ்சலில் வரும். Approve ஆகி விட்டால் உங்கள் தளத்தில் மூன்று இடங்களில் AdSense codeஐ வைத்துக் கொள்ளலாம்.

இப்போது நீங்கள் பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் பகிர்ந்ததில் இருந்தோ அல்லது கூகுள் போன்ற தேடுதளங்கள் மூலமோ உங்கள் தளத்திற்கு வாசகர்கள் வருவார்கள். உங்கள் தளத்தில் நீங்கள் எழுதி இருக்கும் கட்டுரையை பொருத்து அல்லது படிக்கும் வாசகரின் விருப்பத்தை பொருத்து விளம்பரங்கள் உங்கள் தளத்தில் தோன்றும். வாசகர் எவரேனும் அதை கிளிக் செய்யும் பட்சத்தில் உங்களுக்கு வருமானம் வர ஆரம்பிக்கும். குறைந்த அளவே வாசகர்கள் என்றால் வருமானம் குறைவாக தான் இருக்கும். அதிக அளவிலான வாசகர்கள் உங்கள் தளத்திற்கு வந்தால் நீங்கள் எதிர்பார்ப்பதை விட அதிகமான பணம் கிடைக்கும். ஆனால் எந்த சூழ்நிலையிலும் நீங்களே உங்கள் தளத்தில் இருக்கும் விளம்பரங்கள் மீது கிளிக் செய்யக் கூடாது அதே போல படிக்கும் வாசகரையும் விளம்பரங்களை கிளிக் செய்ய சொல்லக்கூடாது. அவ்வாறு செய்தால் உங்கள் ஆட்சென்ஸ் கணக்கு நீக்கப்பட்டு விடும்.

ஒரே ஒரு தளத்திற்கு மட்டும் நீங்கள் ஆட்சென்ஸ்க்கு விண்ணப்பம் செய்தால் போதும்.

அதை பின்னர் பல்வேறு இணையதளங்களில் பயன்படுத்தலாம். ஆனால் குறிப்பிட்ட தளங்கள் ஆட்சென்ஸ் விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கொளத்தூர் மெயில் பத்திரிக்கைக்காக பிப்ரவரி 2016இல் எழுதிய கட்டுரை.

Post a Comment